தில்லியில் உள்ள பிற நாட்டு தூதரகங்கள் வெளியே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் குவிந்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
ஆப்கன் நாட்டினர் மற்றும் பிற நாட்டினர்கள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். தங்கள் மக்களை தாயகம் அழைத்து வர பிற நாட்டு அரசுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் தங்கியுள்ள ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்கு செல்வதற்காக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களுக்கு வெளியே குவிந்து வருகின்றனர்.
தில்லியில் உள்ள ஆஸ்திரேலியா தூதரகத்திற்கு வெளியே ஆப்கன் நாட்டை சேர்ந்த சையத் அப்துல்லா கூறுகையில், “ஆப்கானிஸ்தானை சேர்ந்த 3000 பேருக்கு விசா வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்ததை அடுத்து இங்கு வந்தோம். ஆனால், தூதரகத்தில் யாரும் முறையான பதிலளிக்கவில்லை” என்றார்.
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆப்கன் பெண் கூறுகையில், “தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் வீடு திரும்புவதற்கு எங்களின் குடும்பத்தினர் பயப்படுகிறார்கள். அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் தான் எங்களுக்கு உதவ வேண்டும். இங்கு எங்களுக்கு வேலை இல்லாததால், பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.