புது தில்லி: இந்தியாவில் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியின் போலிகள் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா மற்றும் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் போலியான கோவிஷீல்டு மருந்துகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஸென்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு, இந்தியாவில் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பு மருந்தாகும். இந்திய சீரம் நிறுவனம் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கு பல கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வழங்கி வருகிறது.
சேர்க்கப்படும் மருந்துப் பொருள்களின் அளவில் மாறுபாடு, குப்பிகளின் அளவில் மாறுபாடு உள்ளிட்ட சில விஷயங்களின் அடிப்படையில் போலி கோவிஷீல்டு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் கோவிஷீல்டு 2 மில்லி குப்பிகளில் இருந்த மருந்து போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, இந்திய சீரம் நிறுவனம், நான்கு தவணைகளைக் கொண்ட 2 மில்லி குப்பிகளில் கோவிஷீல்டு மருந்துகளை தயாரிக்கவில்லை. உகாண்டாவில் கோவிஷீல்டு மருந்து 4121Z040 என்ற பாட்ச் எண்ணுடன் 10.08.2021 என்ற மருந்தின் காலாவதி தேதியைக் கொண்ட மருந்தும் போலியானது என்று சீரம் நிறுவனம் உறுதி செய்து உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.