உத்தரப்பிரதேச மாநில எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடரின்போது பாஜக எம்.பி.க்களுடன் காலை சிற்றுண்டி சாப்பிடுவதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார். கடந்த வாரம் மத்தியப்பிரதேச மாநில எம்.பி.க்களுடன் காலை உணவு அருந்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உத்தரப்பிரதேச மாநில எம்.பி.க்களுடன் காலை உணவு அருந்தி தேர்தல் குறித்தும் பிரதமர் மோடி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி.யைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் வரை இதில் கலந்துகொண்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை வருவதையொட்டி, மாநில எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கொண்ட ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.