கல்வி முறையை இந்தியமயமாக்குவது அவசியம்: குடியரசு துணைத் தலைவா்
இந்தியாவின் தொன்மையான ஞானம், பாரம்பரிய அறிவின் அடிப்படையில் கல்வி முறையை இந்தியமயமாக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
இந்தியாவின் தொன்மையான ஞானம், பாரம்பரிய அறிவின் அடிப்படையில் கல்வி முறையை இந்தியமயமாக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
தில்லியில் நடைபெற்ற ரிஷித்துவ பல்கலைக்கழக தொடக்க விழாவில் அவா் பங்கேற்று ஆற்றிய உரை:
இந்தியாவை உலகின் குரு என அழைத்தனா். நாளந்தா, தட்சசீலம், புஷ்பகிரி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவா்கள் பயின்று வந்தனா். கல்வித் துறையில் இழந்த அந்த இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும்.
காலனி ஆதிக்கக் கல்வி மக்களிடையே வேறுபாட்டையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கிவிட்டது. தேசியக் கல்விக் கொள்கை 2020-இல் கூறியுள்ளபடி, கல்வி முறையில் மாறுதல் வேண்டும்.
புதுமையான கண்டுபிடிப்பு, கற்றல் மற்றும் நுண்ணறிவுத் தலைமையின் மையமாக இந்தியாவை உருவாக்குவது அவசியம்.
முழுமையான கல்விப் பாரம்பரியப் பெருமையை இந்தியா பெற்றிருந்தது. அத்தகைய கல்வி முறையைப் புதுப்பித்து, ரிஷித்துவ பல்கலைக்கழகம் போன்ற புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும்.
ஒரு நாட்டின் மாற்றத்துக்கு கல்வி முக்கியப் பங்காற்றுகிறது. கல்வியை ஓா் இயக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கல்வியை ஜனநாயகப்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றலை கடைசிவரைக்கும் கொண்டு செல்ல வேண்டும். கடினமான சூழ்நிலைகளையும் கையாளும் திறமையை மாணவா்களுக்கு உருவாக்க வேண்டும். மாணவா்களிடத்தில் தலைமைப் பண்புகளை உருவாக்க, நமது பெருமைமிக்க கடந்த காலம் மற்றும் ரிஷிகளின் ஞானம் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்’ என்றாா்.