இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை வாரிசுகளிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஆகாஷ் அம்பானி நிர்வாக பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்தநாள் நேற்று( டிச.28) கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ரிலையன்ஸ் குடும்ப விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வரும் காலத்தில் உலகின் வலிமையான புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும். பெரிய கனவுகள் மற்றும் சாத்தியமற்ற இலக்குகளை அடைவதற்கும் சரியான தலைமை இருக்க வேண்டும். அதற்கு சரியான நபர்களை நியமிக்க வேண்டும்.
நான் உள்பட மூத்த தலைமுறையினர் அனைவரும் அடுத்த தலைமுறையாக இளம் தலைமுறைக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நாம் அவர்களுக்கு வழிகாட்டி தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் வளர்ச்சியுறும்போது பின்னால் இருந்து கைதட்டி பாராட்ட வேண்டும். அவர்கள் நம்மைவிட சிறப்பாக பணியாற்றலாம். அதன்படி, ரிலையன்ஸ் இப்போது ஒரு முக்கியமான தலைமை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாட்டில் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் -நீட்டா அம்பானி தம்பதியருக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருக்கின்றனர்.
எனினும் ஒட்டுமொத்த தலைமை மாற்றமாக முகேஷ் அம்பானியின் இடத்தில் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.