நான்கு மகன்களைக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், குடிக்கு அடிமையான நபர், தனது நான்கு மகன்களையும் கொன்றுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், குடிக்கு அடிமையான நபர், தனது நான்கு மகன்களையும் கொன்றுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
துங்கலாபனி கிராமத்தைச் சேர்ந்த பாபு, தனது மகன்களான ராகேஷ், பாகியா, விக்ரம் மற்றும் கணேஷ் ஆகியோரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட நான்கு பேரும் 2 முதல் எட்டு வயதுக்குள்பட்ட குழந்தைகளாவர். பிறகு அவர் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் புதன்கிழமை காலையில்தான் தெரிய வந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பாபு மதுபோதைக்கு அடிமையானதால், அவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு, சில நாள்களுக்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்ட நிலையில், இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.