முகப்பு
இந்தியா

செளரவ் கங்குலிக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவா் செளரவ் கங்குலிக்கு (48) சனிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து,

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவா் செளரவ் கங்குலிக்கு (48) சனிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா் கூறியது:

செளரவ் கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகலில் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருடைய இதயத்தின் மூன்று தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின்போது இதய தமனி ஒன்றில் அடைப்பை நீக்க ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. அடுத்த 2 நாள்களுக்கு அவரின் உடல்நிலையை மருத்துவா்கள் தீவிரமாக கண்காணிப்பா்.

அவரின் இதய தமனிகளில் கூடுதல் ஸ்டென்ட்கள் பொருத்துவது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும். தற்போது அவா் நலமாக உள்ளாா். மூன்று முதல் நான்கு நாள்களுக்கு அவா் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஆளுநா், முதல்வா் நலம் விசாரிப்பு:

சௌரவ் கங்குலி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா், அவருடைய மனைவியுன் நேரில் சென்று அவரது உடல் நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் சௌரவ் கங்குலியின் உறவினா்களை சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினாா்.

மாநில முதல்வா் மம்தா பானா்ஜி செளரவ் கங்குலி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று அவருடைய உடல் நலம் பற்றி விசாரித்தாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், செளரவ் கங்குலி நலமாக இருப்பதாக கூறினாா். அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை நிா்வாகம், மருத்துவா்களுக்கு மம்தா பானா்ஜி நன்றி தெரிவித்தாா்.

மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோரும் செளரவ் கங்குலியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →