'வாழ்க தமிழ்': தில்லி முதல்வர் கேஜரிவால் தமிழில் ட்வீட்
தில்லியில் தமிழ் அகாதெமி அமைத்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்ததற்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்க தமிழ் என பதிலளித்துள்ளார்.
தில்லியில் தமிழ் அகாதெமி அமைத்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்ததற்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்க தமிழ் என பதிலளித்துள்ளார்.
தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமியை அமைத்து தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இதன் தலைவராக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக தில்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் என். ராஜா ஆகியோரை நியமித்து தில்லி அரசு அரசாணை வெளியிட்டது.
தில்லி அரசின் இந்த முன்னெடுப்புக்கு தமிழக முதல்வர் பழனிசாமி சுட்டுரைப் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ட்வீட்:
"தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "தில்லியில் தமிழ் அகாதெமி" அமைத்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
தமிழக முதல்வர் பழனிசாமியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதிவிட்டிருப்பதாவது:
"பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்!"