மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது என மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இதுகுறித்து, மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
Advertisement
“மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடுத்த மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்க வருமாறு நான் அழைக்கிறேன்.
அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத்தின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுப்படுத்துவதிலும் ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.