14 துறைகளில் திறன்மிகு இந்தியர்கள் ஜப்பானில் பணியாற்றுவதற்கான உடன்படிக்கை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செவிலியர், கட்டுமானம், கப்பல் கட்டுதல், விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட 14 துறைகளில் உள்ள திறன்மிகு இந்தியப் பணியாளர்கள் ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு ஏதுவாக, அந்நாட்டுடன் கூட்டுறவு ஒத்துழைப்பு
புது தில்லி: செவிலியர், கட்டுமானம், கப்பல் கட்டுதல், விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட 14 துறைகளில் உள்ள திறன்மிகு இந்தியப் பணியாளர்கள் ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு ஏதுவாக, அந்நாட்டுடன் கூட்டுறவு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளில் இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையும் ஒன்றாகும். ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள்தொகை குறைந்துள்ளது. இந்த நிலையில், அங்கு அத்தியாவசியப் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், இந்தியர்கள் அங்கு பணியாற்றும் வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த உடன்பாடிக்கை வகை செய்கிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவிலிருந்து 14 வகையான திறன்மிகு பணியாளர்களும், நிபுணர்களும் ஜப்பான் நாட்டிற்கு சென்று பணிபுரிய இந்த உடன்படிக்கை உதவும். இந்தப் பணிகளுக்குத் தேவையான திறன்களோடு ஜப்பான் மொழி அறிவு தேவை. இதற்குரிய தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் கண்டறியப்படுவார்கள். ஜப்பானில் பணிபுரியவுள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, "குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர்' என்ற உறைவிட அந்தஸ்தை ஜப்பான் அரசு வழங்குவதற்கும், இந்த உடன்படிக்கை மூலம் இருநாடுகளுக்கிடையே ஒரு 'கூட்டுப் பணிக் குழு' ஏற்படுத்துவதற்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது.
செவிலியர், கட்டடங்களில் தூய்மைப் பணி, தொழில் துறையில் பல்வேறு பொருள்களைக் கையாளும் திறன், இயந்திரங்கள் உற்பத்தி, மின்னணு, மின்சக்தி தகவல் தொடர்பான தொழில், கட்டுமானத்துறை, கப்பல் கட்டுதல், வாகன பராமரிப்பு, வான்வழிப் போக்குவரத்து, விடுதி, விவசாயம், மீன்வளம், உணவு மற்றும் குளிர்பான உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட 14 தொழில்களில் தகுதியுள்ள திறன்மிகு இந்தியப் பணியாளர்கள், நிபுணர்கள் ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு இந்த உடன்படிக்கை உதவும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.