பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: விவசாயிகளுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் பிடிவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வுகான
புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் பிடிவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வுகான முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தில்லி வந்துள்ள அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
விவசாயிகள் தார்மிக அடிப்படையில் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடலாம். ஆனால், தங்களை வருத்திக் கொண்டு போராடுவது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற போராட்டங்களை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வு என்பது இரு தரப்பும் மனது வைத்தால் மட்டுமேதான் முடிவுக்கு வரும். அரசு இணக்கமாக பேசித் தீர்க்க வேண்டும். இதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகளும், இடைத்தரகர்களும் குளிர்காய நினைக்கிறார்கள். போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொள்ள நினைத்தாலும், எதிர்க்கட்சிகள் முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை. எனவே, விவசாயிகள் இதில் விழிப்போடு இருக்க வேண்டும்.
முதல்வர் வேட்பாளர்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதைப் போன்று எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது தேர்தல் நெருங்கும் போது தெரிவிக்கப்படும்' என்றார்.