அமிதாப் பச்சான் குரலில் கரோனா விழிப்புணர்வு: காலர் டியூனை நீக்கக் கோரி பொதுநலன் மனு
செல்லிடப்பேசிகளில் அழைப்புகளை மேற்கொள்ளும்போது நடிகர் அமிதாப் பச்சான் குரலில் கரோனா விழிப்புணர்வு ஒலிபரப்பாவதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: செல்லிடப்பேசிகளில் அழைப்புகளை மேற்கொள்ளும்போது நடிகர் அமிதாப் பச்சான் குரலில் கரோனா விழிப்புணர்வு ஒலிபரப்பாவதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படவிருந்த நிலையில், ஜனவரி 18-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கரோனா விழிப்புணர்வு வாசகத்தை நடிகர் அமிதாப் பச்சான் குரலில் பதிவு செய்ய மத்திய அரசு அவருக்கு ஒரு தொகையை வழங்கியிருக்கும். ஆனால், கரோனாவுக்கு எதிராக போராடியவர்கள், கரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்துவரும் நாயகர்கள் பலரும் உள்ளனர். இவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நடிகர் ஒருவருக்கு பணம் கொடுத்து விழிப்புணர்வு வாசகத்தை பதிவு செய்ய வேண்டுமா?
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு உதவ, பலரும் தங்களது சம்பாத்தியங்களை செலவிட்டுவரும் நிலையில், மத்திய அரசு, கரோனா விழிப்புணர்வு வாசகத்தைக் கூற அமிதாப் பச்சானுக்கு ஊதியம் வழங்கியுள்ளது. அவர் மீது ஏராளமான விதிமீறல் வழக்குகள் உள்ளன. அவர் ஒன்றும் சமூக ஆர்வலரோ, நாட்டுக்காக சேவை செய்த வரலாறோ கொண்டவரல்ல.
எனவே, அவரது குரலில் ஒலிக்கும் கரோனா விழிப்புணர்வு காலர் டியூனை நீக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.