விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் குரல் எழுப்புங்கள்: ராகுல் வேண்டுகோள்
தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக ஆதரவாக சமூக வலைதளத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக ஆதரவாக சமூக வலைதளத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தில்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு தேவை. எனவே மக்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்து 'இந்திய விவசாயிகளுக்கு குரல் கொடுப்போம்' என்ற பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமைதியான போராட்டங்கள் நமது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். விவசாய சகோதர, சகோதரிகள் நாடு முழுவதிலுமிருந்து ஆதரவைப் பெற்று வருகின்றனர். உழவர் எதிர்ப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு நீங்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
விவசாயிகளின் போராட்டங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் கருத்துகள் மற்றும் விடியோ வடிவில் பதிவு செய்யுமாறு கோரியுள்ள அவர், விவசாயிகளின் போராட்டம் குறித்த ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார்.
மேலும், 'நம் நாடு மீண்டும் ஒரு சம்பாரனை எதிர்கொள்ளப்போகிறது. முன்னதாக பிரிட்டாஷாருடன் இருந்த போராட்டம் தற்போது மோடியின் நண்பர்களுடன் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் ஒரு சத்தியாகிரகி. அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தைத் தொடர்வதாகக் கூறியுள்ளனர். அவர்களது கோரிக்கை விரைந்து நிறைவேற நாமும் குரல் கொடுப்போம்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் கடந்த நவம்பர் 26 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.