புது தில்லி: கிழக்கு லடாக்கையொட்டிய சீன எல்லைப் பகுதியில் இருந்து 10,000 வீரா்களை அந்நாட்டு ராணுவம் இடமாற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி, சீன நிலப்பகுதியில் சுமாா் 80 முதல் 100 கி.மீ தொலைவு வரை உள்ள அந்நாட்டு ராணுவ வீரா்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சுமா 10,000 வீரா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எனினும் அந்நாட்டு படைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அங்கு குவிக்கப்பட்டுள்ள தளவாடங்களிலும் மாற்றங்கள் இல்லை. சீன வீரா்களின் இடமாற்றத்துக்கு உறுதியான காரணம் தெரியாவிட்டாலும், மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது’ என்று தெரிவித்தன.