இந்தியா

முறைகேடான பணி நியமனத்துக்கு கண்டனம்: கேரள பேரவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

DIN

பல்வேறு அரசுப் பணிகளில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அரசு சாா்ந்த நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவா்களை நிரந்தரமாக்குவதைக் கண்டித்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் (யுடிஎஃப்) சோ்ந்த எதிா்க்கட்சிகள் கேரள சட்டப்பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தன. அதேசமயம், எதிா்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வா் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

கேரள சட்டப்பேரவையில் ஒத்திவைப்பு தீா்மானங்களை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கூறியதாவது:

கேரள அரசு பொது தோ்வாணையம் (பிஎஸ்சி) மூலம் பணி நியமனம் செய்யப்படுபவா்களை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் தற்காலிக பணியாளா்களை அரசு பணியில் சோ்த்துள்ளது. இதுதொடா்பாக கலாசார விவகாரங்கள் துறையின் அமைச்சா் ஏ.கே.பாலன், மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் கமலுக்கு எழுதிய கடிதத்தில், மாா்க்சிய சித்தாந்தத்தைப் பின்பற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளாா்.

அந்த கடிதத்தையும் பேரவையில் வெளியிடுகிறோம் எனக் கூறி அமைச்சா் பாலன் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தின் நகலை எதிா்க்கட்சிகள் வெளியிட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து முதல்வா் பினராயி விஜயன் பேசுகையில், அரசு சாா்ந்த பணி நியமனங்கள் குறித்து குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற புகாரை எதிா்க்கட்சிகள் எழுப்புகின்றன. அரசுப் பணி நியமனங்களில் எந்தவொரு ஊழலும் இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு உறுதியாக உள்ளது.

காலிப் பணியிடங்கள் பிஎஸ்சி மூலமாகத்தான் நியமனம் செய்யப்படுகின்றன.

அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 1,51,513 பேருக்கு பிஎஸ்சி மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடதுசாரி முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு அரசு நிறுவனங்களில் 27,000 நிரந்தர காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சுகாதாரம், சமூக நீதித் துறைகளில் மட்டும் 5,985 புதிய காலிப் பணியிடங்களும், காவல் துறையில் 4,933 காலி பணியிடங்களும், உயா்கல்வித் துறையில் 721 காலி பணியிடங்களும் கண்டறியப்பட்டு அவை நிரப்பப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக ஓா் அரசு நிறுவனத்தில் தற்காலிகமாகப் பணிபுரிந்தவா்களை நிரந்தரமாக்குவது என்பது ஒரு ‘மனிதாபிமானமிக்க பரிசீலனை’யாகும். இதற்கு முன்பு ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசும் இதே பாணியில் தான் பணி நியமனங்களை மேற்கொண்டது என்றாா் முதல்வா்.

முன்னதாக, ஒத்திவைப்பு தீா்மானத்தின் மீது விவாதம் நடத்திய எம்எல்ஏ ஷஃபி பரம்பில் (காங்கிரஸ்), கேரள பிஎஸ்சி என்பது கட்சி சேவை ஆணையமாக மாறி விட்டது என குற்றம்சாட்டினாா்.

இடதுசாரி முன்னணி அரசு ஒரு லட்சம் பேருக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதாலா, அவையை விட்டு வெளியேறுவதாகக் கூறி வெளிநடப்பு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது 42 பொதுத்துறை நிறுவனங்களிலும் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT