உ.பி.: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனை ஊழியர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 46 வயது ஊழியர், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 46 வயது ஊழியர், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்புக்கும், கரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மொராதாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவை கவனிக்கும் வார்டு பாயானா மஹிபால் சிங் ஞாயிற்றுக்கிழமை மாலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகலில் மஹிபால், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்குப் பிறகே மரணத்துக்கான காரணம் தெரிய வரும். ஆனால், இது கரோனா தடுப்பூசியால் ஏற்பட்டது அல்ல என்று தெரிகிறது. சனிக்கிழமை அவர் இரவுப் பணியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மொராதாபாத் சுகாதாரத் துறை தலைவர் எம்.சி. கார்க் கூறியுள்ளார்.