தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் சிறுத்தை புலியை வேட்டையாடி கறி சமைத்து சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மாங்குளம் அருகே ஒரு கும்பல் வன விலங்குகளை வேட்டையாடுவது மாங்குளம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாங்குளம் வனக் கோட்ட அலுவலர் பி.சுகைப் தலைமையில் ரோந்து சென்றனர்.
அப்போது முனிப்பாறை என்ற இடம் அருகே பி.கே.வினோத் (45), என்பவர் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த பேசில் கார்டன் வி.பி.குரியாகோஷ்(74), சி.எஸ்.பினு(50), குஞ்சப்பன்((54), வின்சென்ட் (50) ஆகிய 5 பேர் சிறுத்தையை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து உண்ட போது கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சிறுத்தையின் சமைத்த கறி, தோல், நகம், பற்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், 5 பேரையும் தொடுபுழா சிறையில் அடைத்தனர்.
வன அலுவலர் கூறியது, வேட்டையாடப்பட்ட சிறுத்தை ஆறு வயதுள்ள ஆண் சிறுத்தை யாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் நிலத்தில், வினோத் வன விலங்குகளை பிடிக்க, குறிப்பாக காட்டுப்பன்றியை பிடிக்க பொறி வைத்ததும், அதில் சிறுத்தை சிக்கிக்கொண்டது.
அதை அவர்கள் கொன்று இறைச்சியை சமைத்து உண்டது இதுவே முதல் முறை எனவும், சிறுத்தையின் தோல், நகம், பற்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். மேலும் இவர்கள் வன விலங்குகளை தொடர்ந்து வேட்டையாடுபவர்கள் என்றும் தெரிவித்தார்.
சிறுத்தையை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து உண்பது இதுவே முதல் முறையாகும்.