நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை வலுவாக முன்வைக்க காங்கிரஸ் முடிவு!
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் மத்திய அரசுக்கு எதிராக வலுவான கருத்துகளை முன்வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் மத்திய அரசுக்கு எதிராக வலுவான கருத்துகளை முன்வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் சீன ஊடுருவல் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் உரையினை புறக்கணிக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம், மணீஷ் திவாரி, மணிக்கம் தாகூர் மற்றும் கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வடக்கு எல்லைகளில் சீன ஊடுருவல் குறித்த தெளிவான நிலை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த நிலைப்பாட்டை காங்கிரஸ் முன்வைக்கும். அத்துடன் ஒத்த கருத்துகளை கொண்ட எதிர்கட்சிகளை அழைக்கவும் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 15 வரை நடைபெறும். அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும்.
மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.