தில்லியில் கரோனா விதிமுறைகளை மீறியதாக லாஜ்பட் நகர் சந்தை மீண்டும் மூடப்பட்டது.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா இரண்டாவது அலை குறைந்ததையடுத்து சந்தைகளை திறக்க அனுமதி அளித்த நிலையில், கரோனா விதிமுறைகளை மீறியதாக சந்தைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,
கரோனா விதிமுறைகள் மீறப்படுவதாக வந்த புகாரையடுத்து மத்திய சந்தை, லாஜ்பட் நகர் மற்றும் லாஜ்பட் நகர் 4 சந்தைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் வருவதும், கடைகளுக்குள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய சந்தை, லாஜ்பட் நகர் மற்றும் லாஜ்பட் நகர் 4 சந்தைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 30ஆம் தேதி கரோனா விதிமுறைகளை மீறுவதாக லட்சுமி நகர் சுற்றுப்புற சந்தைகளை ஜூலை 5ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது.