கரோனா இரண்டாம் அலையின்போது, பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 80 சதவிகிதத்தினர் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டவர்கள் என அரசின் நிபுணர்கள் குழ தலைவர் தெரிவித்துள்ளார்.
கரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்தன. இந்நிலையில், இரண்டாம் அலையின்போது, கரோனாவால் பாதிக்கப்பட்ட 80 சதவிகிதத்தினர் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டவர்கள் என இந்தியா SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, புதிய மரபியல் மாற்றம் அடைந்த கரோனா பரவும் பட்சத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 55 முதல் 60 பேர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
வைரஸின் பரவும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசிக்கு எதிரான வைரஸின் திறன் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. டெல்டா வகை மிக தீவிரமாக பரவும் தன்மை கொண்டது. அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் திறன் கொண்டது.
இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம், டெல்டா வகை முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதன்காரணமாகவே, கரோனா இரண்டாம் அலை பரவியது. அப்போது, புதிதாக பாதிக்கப்பட்டோரில் 80 சதவிகிதத்தினர் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கரோனா, வட மற்றும் மேற்கு பகுதிகளில் இருக்கும் மாநிலங்களுக்கு பரவியது. பின்னர், மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு பரவியது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.