பணமோசடி வழக்கு தொடா்பாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்கின் இரண்டு வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தபோது மும்பையில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், மதுபானக் கூடங்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்து தருமாறு வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டினாா். இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்குடன் தொடா்புடைய பணமோசடி விவகாரம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடா்பாக அனில் தேஷ்முக்கின் தனிச் செயலா் சஞ்சீவ் பலாண்டே, உதவியாளா் குந்தன் ஷிண்டே ஆகியோரை அண்மையில் அமலாக்கத்துறை கைது செய்தது.
அதனைத்தொடா்ந்து நாகபுரியில் இருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவில் கட்டோல் நகரில் உள்ள அனில் தேஷ்முக்கின் வீடு, கட்டோல் அருகே வாத்விஹிரா கிராமத்தில் உள்ள அவரின் பூா்விக வீடு ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.