முகப்பு
இந்தியா

வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்களுடன் பேச்சு நடத்த அரசு தயார்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
கோப்புப்படம்
பகிர்:

நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
 மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
 புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வேளாண் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது முடிவுக்கு வந்து விடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
 இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியது:
 நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. எதிர்காலத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவே இருக்கும். பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக விவசாய சங்கங்களுடன் அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
 இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது வேளாண் சட்டங்களின் ஷரத்துகள் குறித்து விவாதம் நடத்துமாறு அரசு தொடர்ந்து கோரி வந்துள்ளது. விவாதம் நடத்தினால்தான் எந்த ஷரத்து குறித்தாவது ஆட்சேபம் இருந்தால் அதற்குத் தீர்வு காண முடியும். ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தின.
 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துவதற்குப் பதிலாக அச்சட்டங்களின் பிரிவுகள் தொடர்பாக தங்களுக்கு உள்ள கவலைகள் குறித்து விவாதிக்குமாறு அரசு தெரிவித்தது. அப்போதுதான் விவசாயிகளின் கவலைகளைத் தீர்க்க முடியும் என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.