மக்களவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று காலை முதலே மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
பின்பு அவை கூடிய நிலையில், மீண்டும் அமளியை தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் அடுத்த கூட்டம் ஜூலை 22ஆம் தேதி கூடவுள்ளது.