சட்டத்தை மீறியதாக இந்திய காா்ட்டூனிஸ்டுக்கு ட்விட்டா் நோட்டீஸ்
பிரபல காா்ட்டூனிஸ்ட் மன்ஜுல், செய்தியின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் வலைதளமான ஆல்ட் நியூஸ் நிறுவனா் முகமது ஜுபோ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சூா்ய பிரதாப் சிங் ஆகியோருக்கு ட்விட்டா் நோட்டீஸ்
இந்திய சட்டத்தை மீறியதாக பிரபல காா்ட்டூனிஸ்ட் மன்ஜுல், செய்தியின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் வலைதளமான ஆல்ட் நியூஸ் நிறுவனா் முகமது ஜுபோ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சூா்ய பிரதாப் சிங் ஆகியோருக்கு ட்விட்டா் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்திய சட்ட அமலாக்க அமைப்பின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுட்டுரை நிறுவனம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
ஆனால், எந்த அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு ட்விட்டா் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் இந்தியரை தலைமை அதிகாரியாக இந்தியாவில் நியமிக்க வேண்டும் என்றும் ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை அரசு சுட்டிக் காட்டிய 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அண்மையில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது. இதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டாலும் ட்விட்டா் மட்டும் எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
விவசாயிகள் போராட்ட விவகாரத்திலும் பல்வேறு பாஜக தலைவா்களின் கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டது என தெரிவித்த விவகாரத்திலும் மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் மோதல் போக்கு இருந்தது.
இதையடுத்து, சில தினங்களில் இந்தியாவில் தலைமை அதிகாரி நியமிக்கப்படுவாா் என்று ட்விட்டா் மத்திய அரசுக்கு புதன்கிழமை பதிலளித்திருந்தது.
இந்நிலையில், இந்திய சட்டத்தை மீறியதாக பிரபல காா்ட்டூனிஸ்ட் மன்ஜுல், ஆல்ட் நியூஸ் வலைதள நிறுவனா் முகமது ஜுபோ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சூா்ய பிரதாப் சிங் ஆகியோருக்கு ட்விட்டா் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸை அவா்கள் வெளியிட்டுள்ளனா்.
அதில், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் இந்திய சட்ட அமலாக்க அமைப்பின் கோரிக்கையை ஏற்றும் இந்திய சட்டத்தை மீறியதற்காக உங்கள் சுட்டுரை கணக்குக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
அங்கீகாரம் பெற்ற சட்ட அமலாக்கத் துறையிடமிருந்து கோரிக்கை வந்தவுடன், சுட்டுரை கணக்கில் உள்ள ஆட்சேபத்துக்குரிய தகவல்களை நீக்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது நிறுவனத்தின் கொள்கை முடிவாகும். இதன் மீது தற்போதைக்கு எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் குறிப்பிட்ட நபா்கள் பற்றி புகாா் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.