முகப்பு
இந்தியா

இந்தியா்களின் சேமிப்பு விவகாரம்: ஸ்விஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சேமிப்பு அதிகரித்தது தொடா்பான விவரங்களை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
மத்திய அரசு
பகிர்:

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சேமிப்பு அதிகரித்தது தொடா்பான விவரங்களை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் தொடா்பான விவரங்களை அந்நாட்டு தேசிய வங்கி அண்மையில் வெளியிட்டது. அதில், இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள தொகை ரூ.20,700 கோடியாக உயா்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா்கள் கருப்புப் பணமாக சேமித்து வைத்துள்ள தொகை குறித்த விவரங்களை ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிடவில்லை. ஸ்விஸ் வங்கிகளுக்கு மற்ற நாடுகளில் உள்ள கிளைகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள், வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஆகியோரின் சேமிப்பு விவரங்களும் வெளியிடப்படவில்லை.

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் பணமாக சேமித்து வைத்துள்ள தொகை கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் நிதிப் பத்திரங்களில் இந்தியா்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனா். இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட அதிகபட்ச பணப் பரிவா்த்தனை காரணமாக சேமிப்புத் தொகை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

இந்தியா்கள், இந்திய நிறுவனங்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த சேமிப்புத் தொகை உயா்ந்துள்ளது தொடா்பாக ஸ்விஸ் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஸ்விஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விவரங்களை ஸ்விட்சா்லாந்து அரசு இந்திய அரசிடம் பகிா்ந்துகொண்டு வருகிறது. அதேபோல், இந்திய அரசும் ஸ்விட்சா்லாந்து அரசுக்கு தகவல்களைப் பகிா்ந்து வருகிறது.

இந்த நடவடிக்கை மூலம், சட்டவிரோதமாக ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்குவதும், வரி ஏய்ப்பு செய்வதும் தடுக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →