முகப்பு
இந்தியா

இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கு: முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

லட்சத்தீவுகள் விவகாரம் தொடர்பாக லட்சத்தீவுகள் நிர்வாகியை விமர்சித்த திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அவரின்  புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் நடவடிக்கை மீது பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தான விமர்சனம் தெரிவித்து வந்தார். இதுதொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்குபெற்ற அவர், லட்சத்தீவுகள் நிர்வாகியை உயிரி ஆயுதமாக மத்திய அரசு  பயன்படுத்தி வருவதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பாஜகவினர் லட்சத்தீவு காவல்துறையில் புகார் தெரிவித்ததையடுத்து அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் ஆயிஷா சுல்தான தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆயிஷாவுக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.