முகப்பு
இந்தியா

லாப நோக்கமற்ற மருத்துவமனைகளை அதிகம் உருவாக்க ஆய்வு மாதிரி  நீதி ஆயோக் வெளியிட்டது

நாட்டில் லாப நோக்கமற்ற மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு விரிவான ஆய்வு மாதிரியை நீதி ஆயோக் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

நாட்டில் லாப நோக்கமற்ற மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு விரிவான ஆய்வு மாதிரியை நீதி ஆயோக் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
 2030-க்குள் நாடு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைய திட்டமிடப்படுகிறது. தற்போது நாட்டில் சுமார் 35 சதவீதம்தான் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் அரசிடம் உள்ளன. அதிக கட்டணத்தை வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் வசம் இது 61 சதவீதம் உள்ளன. ஆனால், லாப நோக்கமற்ற மருத்துவமனைகள் அதிகபட்சமாக 3.3 சதவீதம் மட்டுமே நாட்டில் உள்ளன. இத்தகைய மருத்துவமனைகள் நாட்டில் அதிகம் உருவாக்க வழிகாட்டும் நோக்கத்தோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் ஜேவி பீட்டர், புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர் டாக்டர் நரசிம்மன், கொச்சி அமிர்தா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சஞ்சீவ் கே சிங் உள்ளிட்ட பல லாப நோக்கமற்ற மருத்துவமனைகளின் தலைவர்கள், நீதி ஆயோக், பிடபிள்யுசி இண்டியா போன்ற அமைப்புகளின் நிபுணர்களின் உதவியால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த மருத்துவமனை மாதிரி உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையை நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் முன்னிலையில் நீதி ஆயோக்கின்(சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் லாப நோக்கமற்ற மருத்துவமனைகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
 அப்போது டாக்டர் வி.கே. பால் கூறுகையில், "சுகாதாரத் துறை விரிவாக்கத்தில் தனியார்களின் முதலீடு குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இந்த நிலையைப் போக்குவதற்கு நிதியமைச்சரால் பல்வேறு ஊக்கங்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. லாப நோக்கில்லாத மருத்துவத் துறை பற்றிய இந்த ஆய்வு, இந்தப் பாதைக்கான ஒரு சிறிய முயற்சியாகும்' என்றார்.
 இந்த லாப நோக்கமற்ற மருத்துவ ஆய்வு மாதிரி குறித்து நீதி ஆயோக் வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 தனியார் மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசின் பல்வேறு சுகாதார திட்டங்கள் குறித்தும் நீதி ஆயோக் விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. லாப நோக்கத்துடன் செயல்படும் மருத்துவ நிறுவனங்கள் பற்றி போதிய தகவல்கள் உள்ளன. ஆனால், தரமான மருத்துவம் கிடைக்கும் வகையில் சேவையாற்றும் லாப நோக்கமற்ற மருத்துவ நிறுவனங்கள் குறித்த நம்பகத் தன்மை வாய்ந்த தகவல்கள் மிகக் குறைவாக உள்ளன. அந்த இடைவெளியை இந்த ஆய்வு போக்கியுள்ளது.
 லாப நோக்கமற்ற மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் கட்டணக் குறைவு உத்திகள் குறித்து இந்த அறிக்கை விரிவாக விவாதிக்கிறது. இதுபோன்ற நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமைகளையும் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள சவால்களையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. லாப நோக்கமற்ற மருத்துவமனைகள், நோய்யைத் தீர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளதோடு, நோய் முன் தடுப்பு சுகாதாரத்தையும் வழங்குகிறது. இவை சமூகச் சீர்திருத்தம், சமூக ஈடுபாடு, மருத்துவக் கல்வி ஆகியவற்றுடன் சுகாதார சேவையையும் இணைந்து வழங்குகிறது. பல ஆண்டுகளாக, இத்தகைய மருத்துவத் துறையைப் பற்றி நாடு புரிந்துகொள்ளாமல் இருந்தது. இதில் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments