ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும் என அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அல்லது போரில் ஒப்பந்தத்துக்கு வர அமெரிக்கா விதித்த காலக்கெடு (புதன்கிழமை அதிகாலை) நெருங்கி வரும் நிலையில், ஈரானை ஒரே நாள் இரவில் முற்றிலுமாக அழித்துவிட முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தணிக்க எகிப்து, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளன. அதன்படி, 45 நாள்கள் போரை நிறுத்திவிட்டு, நிரந்தர அமைதிப் பேச்சு தொடங்க திட்டமிடப்பட்டது.
Advertisement
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்க அதிபரின் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருக்கு இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டது. ஆனால், ‘அச்சுறுத்தல்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் மத்தியில் பேச்சுக்கு இடமில்லை’ என ஈரான் இதை நிராகரித்துவிட்டது.
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்றிரவு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை) அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஒரே இரவில் ஈரானை முற்றிலுமாக அழித்துவிட முடியும். அந்த இரவு நாளையாகக்கூட இருக்கலாம். ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும் வெடித்துச் சிதறி மீண்டும் பயன்பாட்டுக்கு வராதபடி செய்ய முடியும்.
நாளை சரியாக 12 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு) அனைத்தையும் தரைமட்டமாக்க முடியும். ஈரான் மக்கள் தங்களின் சுதந்திரத்துக்காக மீண்டும் துன்பப்பட தயாராகிவிட்டனர். சுதந்திரத்துக்காக அதனை ஏற்கவும் ஈரான் மக்கள் தயாராக இருப்பார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், டிரம்ப்பின் எச்சரிக்கை மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிக்க... தற்காலிக போா்நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்; நிரந்தர போா் முடிவையே விரும்புவதாகத் தெரிவிப்பு!