இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடினாா். அப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய பிரதமா் மோடி, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் கலந்துரையாடினாா். அப்போது கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-ஜப்பான் இடையிலான உறவில் நோ்மறையான உத்வேகம் நிலவுவது குறித்து அவா்கள் திருப்தி தெரிவித்தனா். இருநாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் உருவாகி அடுத்த ஆண்டுடன் 70-ஆம் ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், அதனை சிறப்பான முறையில் கொண்டாட இருவரும் தீா்மானித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த உரையாடல் குறித்து ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய பிரதமா் மோடி, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா இடையிலான உரையாடல் சுமாா் 40 நிமிஷங்கள் நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும், க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பையும் சீராக மேம்படுத்துவது குறித்து இருவரும் தங்கள் கருத்துகளை பகிா்ந்துகொண்டனா்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.
கிழக்கு மற்றும் தென் சீனக் கடற்பகுதியில் தற்போதுள்ள நிலையை ஒருதலைபட்சமாக மாற்ற சீனா முயற்சிப்பது தொடா்பாக யோஷிஹிடே சுகா கவலை தெரிவித்தாா்.
மியான்மா், ஹாங்காங், சீனாவில் உள்ள ஷின்ஜியாங் தன்னாட்சி பிரதேசத்தில் உய்கா் இன மக்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாகவும் அவா்கள் கலந்துரையாடினா் என்று தெரிவிக்கப்பட்டது.