அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு நடவடிக்கை
அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு
புது தில்லி: அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பதில் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களது வாழ்க்கை நிலை, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்கள், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து சென்றுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக திமுக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதில் விவரம்:
நாட்டில் 2017-18-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அமைப்பு ரீதியாகவும், அமைப்பு சாரா துறை ரீதியாகவும் சுமார் 47 கோடி பேர் பணியில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதில், 9 கோடி பேர் அமைப்பு ரீதியாகவும், 38 கோடி பேர் அமைப்பு சாரா பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
கரோனா தொற்று காலகட்டத்தில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். இந்தக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1.14 கோடி பேர் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 72 ஆயிரம் பேர் வெளி மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்திருந்தனர். இவர்கள் கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, தமிழகம் திரும்பியுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.