உ.பி.யில் நீதி கிடைப்பது கடினம் என்ற நிலையே உள்ளது: ஹத்ராஸ் சம்பவம் குறித்து மாயாவதி
ஹத்ராஸ் பாலியல் சம்பவத்துக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினர் நீதியைப் பெற பல சிரமங்களை எதிர்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் பாலியல் சம்பவத்துக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினர் நீதியைப் பெறுவதில் தொடர்ந்து பல சிரமங்களை எதிர்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் இளம்பெண், கடந்த செப்டம்பா் மாதம் 14-ஆம் தேதி 4 நபா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தப் பெண் தில்லி மருத்துவமனையில் அதே மாதம் 29-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். நால்வர் மீதும் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Advertisement
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி,
உ.பி.யில் மிகவும் சோகமான மற்றும் வெட்கக்கேடான ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் நீதியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறது.
ஆனால் நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த புதிய உண்மைகள் அரசின் மோசமான செயல்பாடு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
வழக்கில் சாட்சிகளை அச்சுறுத்துவது தொடர்பான விவகாரத்தை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, உபி அரசு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்று மக்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உ.பி.யில் நீதி கிடைப்பது கடினம் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. அது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.