மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தலில் 30 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் 30 இடங்களில் 26 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். அதேபோல அசாமில் 47 இடங்களில் 37க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் கிடைத்துள்ளன.
நேற்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்குவங்கத்தில் எந்தவொரு வன்முறை சம்பவமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த மேற்கு வங்கப் பெண்களுக்கு நன்றி கூறுகிறேன்.
மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். மாநிலத்தில் வன்முறை இல்லாத வாக்குப்பதிவை நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுகிறேன்.
மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற நிலையில் 79.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.