கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஆரிப் முகம்மது கானிடம் அளித்தார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
கேரளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. அந்த வரலாற்றை இடதுசாரிகள் கூட்டணி தற்போது மாற்றியுள்ளது. தொடா்ந்து 2-ஆவது முறையாக அக்கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்க உள்ளார்.
இடதுசாரி ஜனநாயக கூட்டணி 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிட்டு 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து தனது தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்கஉள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஆரிப் முகம்மது கானிடம் அளித்தார்.
மேலும், இன்று இடதுசாரி ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சரவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.