கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கரோனா: கேரள முதல்வர் கவலை
கேரளத்தில் கரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகரிப்பது கவலையளிப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கேரளத்தில் கரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகரிப்பது கவலையளிப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மாநில கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:
"72 பஞ்சாயத்துகளில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 50 சதவிகிதத்துக்கும் மேல் பதிவாகிறது. அதில் 19 பஞ்சாயத்துகள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளன. 300 பஞ்சாயத்துகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 30 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது.
57 பஞ்சாயத்துகளில் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 500 முதல் 2000 வரை உள்ளன.
கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்த மாவட்டங்களில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
மாநிலத்தில் 27,487 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 99,748 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 27.56 சதவிகிதமாக உள்ளது" என்றார் பினராயி விஜயன்.