சூழலுக்கு ஏற்ப அற்புதமாக விளையாடிய சமீர் ரிஸ்வி; முன்னாள் கேப்டன் பாராட்டு!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சூழலுக்கேற்ப அற்புதமாக விளையாடியதாக சமீர் ரிஸ்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டியுள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சூழலுக்கேற்ப அற்புதமாக விளையாடியதாக சமீர் ரிஸ்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற போட்டிட்யில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தில்லி கேபிடல்ஸ் அணி, 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய இளம் வீரர் சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் (5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 39 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தார்.
இந்த நிலையில், ஆட்டத்தின் சூழலுக்கேற்ப அழகாக விளையாடியதாக சமீர் ரிஸ்விக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஆட்டத்தின் சூழ்நிலைக்கேற்ப சமீர் ரிஸ்வி அழகாக விளையாடினார். கடந்த சீசனில் அவருடன் நிறைய நேரம் செலவிட்டு அவரது அருகிலிருந்து அவர் விளையாடியதைப் பார்த்ததால், அவரது இந்த ஆட்டம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த சீசனின் பயிற்சி ஆட்டத்தில் அவர் சதம் விளாசினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவருக்கு கடந்த சீசனின் முதல் பாதி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின், அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிகவும் நன்றாக விளையாடினார்.
இளம் வீரர்கள் மீது முதலீடு செய்யும்போது, அவர் கண்டிப்பாக நன்றாக விளையாடுவார் என நிர்வாகம் நம்பிக்கை வைக்க வேண்டும். சமீர் ரிஸ்வி மீது தில்லி அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றியுள்ளார். மிகுந்த அழுத்தமான சூழலில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். அணிக்காக சதம் விளாசுவதைக் காட்டிலும் போட்டியை வென்று கொடுப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தரும் என்றார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய சமீர் ரிஸ்விக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.