யாஸ் புயல்: 4 மாநிலங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப் படை
வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சேர்ந்த 99 குழுவினர் தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரம் மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கு விரைந்துள்ள
வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சேர்ந்த 99 குழுவினர் தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரம் மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கு விரைந்துள்ளது.
ஒடிசாவுக்கு மட்டும் 18 தேசிய பேரிடா் மீட்புப் படைக் குழுவினர் விரைந்துள்ளனர். இவர்களுடன் ஒடிசா பேரிடர் மீட்புப் படையினரும், 177 தீயணைப்புப் படையினரும் புயல் கடுமையாக தாக்கக் கூடும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து அந்தமானுக்கு விமானங்களில் 606 படை வீரா்கள் 57 டன்கள் அதிநவீன கருவிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விரைந்தனா்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறியது. அப்புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது.
மேலும் இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் வடக்கு, தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையினர் புயல் பாதிப்பு இருக்கும் மாநிங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தேசிய பேரிடா் மீட்புப்படை தளத்தின் தலைமையகம் மற்றும் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படை தளங்களில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு யாஸ் புயல் பாதிப்பு பகுதிகளுக்கான கண்காணிப்பு பணிகளும், பாதிப்புக்குள்ளாகும் மாநில, மாவட்ட நிா்வாகங்களை தொடா்பு கொள்ளும் பணிகளும் நடைபெற்று வருவதாக தேசிய பேரிடா் மீட்புப்படையின் தகவல் குறிப்பு தெரிவித்துள்ளது.