தெற்கு மாவட்டங்களில் நாளைமுதல் இபிஎஸ் பிரசாரம்!
தெற்கு மாவட்டங்களில் நாளைமுதல் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் ஆரம்பம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின் தெற்கு மாவட்டங்களில் நாளைமுதல் அஇஅதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார்.
தேர்தல் அறிவிப்புக்குப் பின் சென்னை, மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபட்டுவிட்டு அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை இந்த வாரம் தொடங்கினார் பழனிசாமி.
அதன் தொடர்ச்சியாக, சென்னை சுற்றுவட்டாரத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ள அவர், அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 29) முதல் அடுத்து சில நாள்களுக்கு தெற்கு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைச் சந்திக்கிறார்.
நாளை (மார்ச் 29) கன்னியாகுமரி தொகுதிக்குச் செல்லும் அவர் அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைசர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார். மேலும், தங்களுடன் கூட்டணியிலுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிடும் அக்கட்சிக்கும் அதேபோல தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிள்ளியூர் தொகுதியையும் உள்ளடக்கி நாகர்கோவிலில் அவரது நாளைய பிரசாரம் அமைய உள்ளது.
மறுநாளான மார்ச் 30-இல், அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலிம் அதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் பிரசாரம். மார்ச் 31-இல், விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் பிரசாரம். ஏப். 1-இல், சிவகங்கை, புதுக்கோட்டையில் முதல்கட்ட பிரசாரத்தை அவர் நிறைவு செய்கிறார்.