தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
தமிழகத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது தொடர்பாக...
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(ஏப்.20) பிரசாரம் மேற்கொள்கிறார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்கிறார்.
கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலுக்கு வருகிறார். அங்கு பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
Advertisement
பின்னர் நான்குனேரிக்கு பகல் 1 மணிக்கு சென்றடைகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகே நடைபெறும் பிரசார மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரனை ஆதரித்து பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.15 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட சாயர்புரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னா், இரவு 8 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.