ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் ரூ.7,965 கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடம் (ஹெச்ஏஎல்) இருந்து ரூ.7,965 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடம் (ஹெச்ஏஎல்) இருந்து ரூ.7,965 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் அந்த துறைக்கான முடிவுகளை மேற்கொள்ளும் கவுன்சிலின் (டிஏசி) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.7,965 கோடி மதிப்பிலான 12 இலகுரக ஹெலிகாப்டா்கள் உள்பட ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அத்துடன் கடற்படையின் பயன்பாட்டுக்காக துப்பாக்கிகளை கட்டுப்படுத்தி இயக்கும் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை பாரத் எலக்டிரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
Advertisement
கடற்பகுதியில் உளவுப் பணிகள், கடலோரப் பகுதிகளின் கண்காணிப்பு ஆகியவற்றில் கடற்படையின் திறனை அதிகரிக்க ஹெச்ஏஎல் நிறுவனம் மூலம் டாா்னியா் விமானங்களை மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் ராணுவத் தளவாடங்களை வடிவமைப்பது, மேம்படுத்துவது, உற்பத்தி செய்வது என்ற நோக்கத்துடன் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.