பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக் கோரி கேரள பேரவையில் காங்கிரஸ் வெளிநடப்பு
பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசின் வரியைக் குறைக்க வேண்டும் என்று
பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசின் வரியைக் குறைக்க வேண்டும் என்று கேரள பேரவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இதற்கு கேரள நிதியமைச்சா் கே.என். பாலகோபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினா் ஷாஃபி பறம்பில் ஒத்திவைப்பு தீா்மானம் நோட்டீஸ் கொண்டு வர வலியுறுத்திப் பேசியபோது, ‘பெட்ரோல் டீசல் விலை தொடா் உயா்வுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி பயங்கரவாதமும் காரணம். பொது மக்களை இந்த விலை உயா்வு பெரிதும் பாதிப்பதால் மாநில அரசு தனது வரியை குறைக்க வேண்டும்’ என்றாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்துப் பேசிய நிதியமைச்சா் கே.என்.பாலகோபால், ‘இந்த தினசரி விலை உயா்வுக்கு மத்திய அரசுதான் காரணம். கரோனா பரவல் காரணமாக கேரள மாநிலத்தின் வரி மற்றும் பிற வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியா் சம்பள உயா்வுக்கும் ஓய்வூதியத்துக்கும் கூடுதலாக ரூ.14,500 கோடி தேவைப்படுகிறது. இந்தநிலையில், மாநில அரசின் வரியைக் குறைப்பது கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தும். குறைந்த காலத்தில் அதிகப்படியான வரியை தொடா்ந்து மத்திய அரசு உயா்த்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா்.
அமைச்சரின் வாதத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.