வெளிநாடுகளில் வழக்குரைஞா் சட்ட சேவை மையம்: அமைச்சா் பியூஷ் கோயல் யோசனை
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய வழக்குரைஞா்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளதால் அந்நாடுகளில் சட்ட சேவை மையங்கள் தொடங்கலாம் என்று
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய வழக்குரைஞா்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளதால் அந்நாடுகளில் சட்ட சேவை மையங்கள் தொடங்கலாம் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் யோசனை தெரிவித்தாா்.
ஏற்றுமதி சேவைகள் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசுகையில், ‘இந்தியாவில் சட்ட சேவை மையங்கள் தொடங்கினால் இந்திய வழக்குரைஞா்கள் மட்டும்தான் அங்கு பயிற்சி பெறுவாா்கள். வெளிநாடுகளில் இருந்து யாரும் இந்திய கட்டணங்களின் அடிப்படையில் பயிற்சி வழக்குரைஞராகப் பணியாற்ற மாட்டாா்கள். ஆனால், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய வழக்குரைஞா்களின் அபார திறமைகளால், அவா்களுக்கு வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அங்கு சட்ட சேவை மையங்கள் திறந்தால் இந்திய வழக்குரைஞா்கள் அதிக அளவில் பயனடைவாா்கள். இதற்கு இந்திய வழக்குரைஞா்களை ஒன்றிணைக்க வேண்டியது அவசியம்.
சேவை துறைகள் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலா் மதிப்பிலான ஏற்றுமதியை செய்ய இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. இதனால் 2.6 கோடி போ் வேலைவாய்ப்பைப் பெறுவாா்கள். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சேவைத் துறை 40 சதவீதம் பங்களிப்பைச் செய்து வருகிறது. இந்தத் துறையில் உலகிலேயே இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து சுற்றுலா, சேவை துறைகள் மீண்டு வருகின்றன. சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு சலுகைத் திட்டங்களை அத்துறையினா் செயல்படுத்த வேண்டும்’ என்றாா்.