குஜராத் மாநிலத்தில் தெருவோரக் கடைகளை அகற்ற அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டது, பல தெருவோரக் கடைக்காரர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே தெருவோரக் கடைகள் செயல்படத் தடை விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார்.
சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்வதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும் தெருவோரக் கடைகளை அகற்ற உத்தரவிட்டதாக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
தெருவோரக் கடைகள் செயல்படக் கூடாது என்பது அரசின் நோக்கமல்ல. சுகாதாரமற்ற உணவுகள் மக்களுக்கு சென்று சேரக்கூடாது என்பதே நோக்கம் என்றும் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து குஜராத், ஆமதாபாத் உள்ளிட்ட பகுதியில் தெருவோரத்தில் இருந்த தள்ளுவண்டிக் கடைகளை லாரிகள் கொண்டுவந்து நகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதனால் தெருவோரக் கடைகளை நம்பியிருந்த வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஆமதாபாத்தை சேர்ந்த வியாபாரி ராகேஷ், நகராட்சி நிர்வாகம் தெருவோரக் கடைகளை அகற்றியதால், வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, கோயில்களை சுற்றிலும் 100 மீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை வழங்கும் தள்ளுவண்டிக் கடைகள் இருக்கக் கூடாது என்று அரசு கூறுகிறது. ஆனால் அந்தே 100 மீட்டர் சுற்றளவில் அசைவ உணவகங்கள் செயல்படுகின்றன. அவை சமைக்கும் உணவிலிருந்து அசைவ வாசம் வராதா? என்று கேள்வி எழுப்பினார்.
அசைவ கடைகளை அகற்றும் அரசு தெருவோரத்தில் சைவ மாலை சிற்றுண்டி விற்று வரும் எனது கடையையும் அகற்றியுள்ளது. எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குஜராத்தை சேர்ந்த வியாபாரி தெரிவித்துள்ளார்.