வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி மனநல நாள் கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து, மத்திய அரசு சார்பில் 'மனநல விழிப்புணர்வு வாரம்' தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மனநல விழிப்புணர்வு பிரசார வாரத்தின் ஒரு பகுதியாக யுனிசெப்பின் உலக குழந்தைகள் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
21 ஆம் நூற்றாண்டில் குழந்தைகள், இளம்பருவத்தினரின் மன நலம் குறித்த விரிவான தகவல்களை இது அளிப்பதாகவும் கரோனா தொற்றுநோய் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து, செவ்வாய்க்கிழமை தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரை மனநல விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
மனநலம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தும் பொருட்டும் மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டும் மனநல விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் பேரணிகள், விழிப்புணர்வு பிரசாரங்கள், பிராந்திய மொழிகளில் குறும்பட வெளியீடு, போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.