புது தில்லி: உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு பழைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய பாடத்திட்டத்தின்படி, 2022-23ஆம் ஆண்டு நடைபெறும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு கடைசி நேரத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் 41 மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். வழக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல், பழைய பாடத்திட்டத்தைப் பின்பற்றி தாங்கள் தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், திடீரென பாடத்திட்டத்தை மாற்றப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர்.
இதையும் படிக்கலாமே.. உப்பு உடம்புக்கு நல்லதா? இல்லை என்பதே பதில்
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிக்கை கடந்த ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு புதியப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவித்தது. ஆதேவேளையில், தேர்வு நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டதாக மனுவில் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயார் ஆவதற்கு வசதியாக ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.
இன்றைய விசாரணையின் போது, பழைய பாடத்திட்டத்தின்படியே உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்தது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது வழக்கை முடித்த வைத்து உத்தரவிட்டது.