கோவா சட்டப்பேரவை உறுப்பினர் பிரசாத் கெளன்கர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை இணையவுள்ளார்.
அடுத்தாண்டு கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தரப்பினர் இணைந்து வருகின்றனர்.
கடந்த மாதம் கோவா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ ஃபெலேரோ திரிணமூலில் இணைந்தார். இந்நிலையில், கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர் பிரசாத் கெளன்கர், தனது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பிரசாத் கூறுயது:
“பாஜகவுக்கு எதிரான கோபத்தை காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அதனால், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு தருகிறேன்.
தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தாண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.”
மேலும், பிரசாத் இம்மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு திரிணமூல் காங்கிரஸின் முறையாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கும் பிரசாத் ஆதரவு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.