உலக பட்டினி குறியீடு வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்டது. அதில், இந்தியா பின்தங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் 94ஆவது இடத்திலிருந்த இந்தியா, 101ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. பாகிஸ்தானை விட இந்தியா மோசமாக செயல்பட்டுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது. இந்தியாவில் பட்டினி நிலை அச்சமூட்டும் விதமாக உள்ளது என உலக பட்டினி ஆய்வறிக்கை கூறுகிறது.
வறுமை, பட்டினியை ஒழித்து இந்தியாவை வல்லரசாக்கியதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என கபில் சிபல் கிண்டல் அடித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், "
1) வறுமை ஒழிப்பு
2) பட்டினி ஒழிப்பு
3) இந்தியாவை உலக வல்லரசாக்கியதற்கு
4) டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு
5) இன்னும் எண்ணிலடங்காத காரணங்களுக்காக
பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்
உலக பட்டினி குறியீட்டில் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தை பின்னுக்கு தள்ளி
2020: 94ஆவது இடத்தில் இந்தியா
2021: 101 இடத்தில் இந்தியா" என பதிவிட்டுள்ளார்.
உலக பட்டினி குறியீட்டில் 5க்கும் குறைவான புள்ளிகளை பெற்று, பட்டினி குறைவாக உள்ள நாடுகளில் சீனா, கியூபா ஆகிய கம்யூனிஸ்ட் நாடுகள் முன்னணி வகிக்கின்றன. பெலாரஸ், பிரேசில், குவைத் ஆகிய நாடுகளும் ஐந்துக்கும் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது.
உலக பட்டினி குறியீட்டில் 6.2 புள்ளிகளை பெற்று ரஷியா 25ஆவது இடத்திலும் 6.8 புள்ளிகளை பெற்று சவுதி அரேபியா 29ஆவது இடத்திலும் உள்ளது. 16 புள்ளிகளை பெற்ற இலங்கை 65ஆவது இடத்திலும் 19.1 புள்ளிகளை பெற்ற வங்கதேசம் 76ஆவது இடத்திலும் உள்ளது.
27.5 புள்ளிகள் பெற்ற இந்தியா, 101ஆவது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு வெளியான பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தை பிடித்திருந்தது. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பட்டினி அதிகமாக இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.
குறிப்பாக, ஏழ்மை அதிகமாக உள்ள அங்கோலா, சூடான், ருவாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்கா நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.