இந்தியா 9 மாதங்களில் 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை
இந்தியாவில் 9 மாதங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் 9 மாதங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் உத்தரகண்டில் அதிகபட்சமாக முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடி மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி 9 மாதங்களுக்கு பிறகு 100 கோடி தவணைகள் என்ற எண்ணிக்கையை இந்தியா கடந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனா 100 கோடி தடுப்பூசி தவணைகளை எட்டியது. அதன்பிறகு உலகிலேயே இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசின் கோ-வின் வலைதளத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 100 கோடியை கடந்ததை அடுத்து, அதனை கொண்டாடும் விதமாக தில்லி செங்கோட்டையில் ஆவணப் படத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தொடக்கிவைக்க உள்ளார்.
தில்லி விமான நிலையத்தில் ஸ்பேஸ் ஜெட் நிறுவனமும் இந்த நிகழ்வை கொண்டாட உள்ளது. இந்த நிகழ்வில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா பங்கேற்க உள்ளார்.
தில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை அரசு மருத்துவமனைகளிலும், விமானம், ரயில், கப்பல், மெட்ரோக்களிலும் அறிவிப்பு வெளியிட்டு கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
வாழ்த்துகள்: இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய 9 மாதங்களில் 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளதற்கு டாக்டர் வி.கே.பால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய 9 மாதங்களில் 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசி 75 சதவிகிதம் பெரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அதே நேரத்தில், 25 சதவிகிதம் பெரியவர்கள் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகள் முன்னோக்கி செல்ல வேண்டும்.
நாட்டில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். சுமார் 10 கோடி பேர் காலதாமதமாக முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் 2 ஆவது தவணை தடுப்பூசியையும் பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் பெறவில்லை. அவர்களுக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டல்களை சுகாதாரத்துறையினர் அனுப்ப வேண்டும் என டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையில் ரயில்வே ஊழியர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டவர், மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசி குறித்த தயக்கத்தை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.