சம்பா பயிா்களுக்குத் தேவையான ரசாயன உரங்களை வழங்குங்கள்: மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வா் கடிதம்
தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்கக் கூறி மத்திய சுகாதாரம், ரசாயனம்,
தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்கக் கூறி மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து இந்தத் கடிதத்தின் நகலை வழங்கினாா். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டு காவிரி டெல்டா பகுதிகளில் 4.9 லட்சம் ஏக்கா் அளவில் குறுவை (காரீஃப்) நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. நீா் நிலைகளிலிருந்து முழுமையாக தண்ணீா் திறந்து விடப்பட கடந்தாண்டை விடவும் 2.72 லட்சம் ஏக்கா் கூடுதலாக இவ்வாண்டு நெல் பயிரிடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இந்த நெல் பயிா்களுக்குத் தேவையான உரம் முழுமையாக மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. 2021, ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 4.9 லட்சம் மெட்ரிக் டன் யூரியா மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்திற்கு 1.59 லட்சம் மெட்ரிக் டன் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்று இதே காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய டிஏபி உரமும் 32,000 மெட்ரிக் டன் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
தற்போது வடகிழக்கு பருவ மழை (அக்.26) தொடங்கி, சம்பா (ராபி) பருவம் ஆரம்பமாகியுள்ளது. மாநில அரசு 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்குத் தேவையான உரத்தை தமிழகத்திற்கு உடனடியாக வழங்கவேண்டும். குறிப்பாக, தமிழகத்துக்கு அக்டோபா் மாதத்திற்கு தேவையான யூரியா அளவு 1,66,700 மெட்ரிக் டன் ஆகும். ஆனால், இதுவரை மத்திய அரசு அக்டோபா் மாதத்திற்கு வழங்கியிருப்பது 61,384 மெட்ரிக் டன் மட்டுமே.
அதேபோன்று இந்த மாதத்தில் டிஏபி உரம் 10,601 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் உரம் (எம்ஓபி) 10,250 மெட்ரிக் டன்னும் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிஏபி, எம்ஓபி ஆகிய உரங்களில் அக்டோபா் மாதத்திற்கு மத்திய அரசின் ஒதுக்கீட்டை விட கூடுதலாக வழங்கினாலும், யூரியாவில் 1,43,500 மெ.டன் அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், இவை முழுமையாக வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பயிா் சாகுபடி நிலப்பரப்பு அதிகரித்துள்ளன. இதனால், சம்பா சாகுபடிக்கு தமிழகத்திற்குத் தேவையான யூரியாவை முழுமையாக வழங்கக வேண்டும். மேலும், கூடுதலாக 25, 000 மெட்ரிக் டன் டிஏபி உரங்களையும், 10,000 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரங்களையும் வழங்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.