முகப்பு
இந்தியா

‘இனி டி.டி.ஏ. பூங்காக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தலாம்’

கல்வி நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் இனி கலை நிகழ்ச்சிகளை டிடிஏ பூங்காக்களில் நடத்தலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

கல்வி நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் இனி கலை நிகழ்ச்சிகளை டிடிஏ பூங்காக்களில் நடத்தலாம். இதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நகர அமைப்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதற்கான கொள்கை முடிவு இரண்டு நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்திய குடிமக்கள், பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த இந்திய நிறுவனங்கள் இனி கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தில்லி வளா்ச்சிக் குழுமத்தின் பூங்காக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். தில்லி வளா்ச்சிக் குழுமத்தின் கீழ் 800 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஸ்வா்ண ஜயந்தி பூங்கா, அஷ்டா குஞ்ச் பூங்கா, காா்ப்பரேஷன் பூங்கா, ஹவுஸ்காஸ் பூங்கா, மெஹ்ரெளலி தொல்லியல் பூங்கா ஆகியவலை குறிப்பிடத்தக்கவை.

முன்னதாக, வகுக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் அரசியல் நிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகளை பூங்காக்களில் நடத்த அனுமதி இல்லை. இந்திய குடிமக்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கலாசாரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு சாராத அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள் இந்த பூங்காக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

இது தொடா்பான மேல் விவரங்களுக்கு வலைத்தளங்கள் மூலம் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மூன்று ஏக்கா் பரப்பளவுக்கு மேல் உள்ள பூங்காக்களை பசுமை மாறாமல் பரமாரிப்பதற்கான விதிமுறைகளும் தளா்த்தப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் உள்ளிட்டவை பூங்காக்களை தத்தெடுத்து பராமரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.