18 மாதங்களுக்குள் பெட்ரால் ரூ.36, டீசல் ரூ.26.58 விலை அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து நான்காவது நாளாக சனிக்கிழமையும் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து நான்காவது நாளாக சனிக்கிழமையும் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, 18 மாதங்களுக்குள் பெட்ரோல் ரூ.36, டீசல் ரூ.26.58 விலை உயா்த்தப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடா்ந்து நான்காவது நாளாக சனிக்கிழமையும் 35 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.107.24-ஆகவும், டீசல் ரூ.95.97-ஆகவும் உயா்ந்துள்ளது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ளதை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் அவற்றின் சில்லறை விற்பனை விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. பல முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2020 மே 5-ஆம் தேதியிலிருந்து தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.35.98 உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, டீசலும் லிட்டருக்கு ரூ.26.58 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு மாா்ச் 31-லிருந்து இதுவரையில் ரூ.3.35 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டு வரி வசூலான ரூ.1.78 லட்சம் கோடியைக் காட்டிலும் 88 சதவீதம் அதிகம்.
கரோனா பேரிடருக்கு முந்தைய 2018-19-நிதி ஆண்டில் இந்த வரி வசூல் ரூ.2.13 லட்சம் கோடியாக இருந்தது.